
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், இயக்கி இருக்கும் படம் இனம். இப்படத்தில் சரிதா, கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறது. நாளை(மார்ச் 28ம் தேதி) இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் இனம் படத்தின் ப்ரீமியர் ஷோ சென்னையில் நடந்தது. திரையுலகைச் சேர்ந்த வி.ஐ.பி.க்களுக்காக திரையிடப்பட்ட அந்த ப்ரிமியர் ஷோவில் இயக்குநர் வ.கவுதமன் உள்ளிட்ட தமிழ்இன உணர்வாளர்கள் சிலரும் படத்தைப் பார்த்திருக்கின்றனர்.
இனம் படம் முழுக்க முழுக்க தமிழ் மக்களுக்கு எதிரானதாக எடுக்கப்பட்டிருப்பதாக அப்போது படம் பார்த்த பலர் கூறியிருந்தனர்.
இந்நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் கொளத்தூர் மணி, சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில் இனம் படம் தமிழர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் அப்படத்தை வெளியிடக்கூடாது என்றும், இப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும், படத்தை மீறி திரையிட்டால் தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று தனது புகாரில் கூறியிருக்கிறார்.
இதனிடையே இப்பிரச்னை தொடர்பாக இயக்குநர் சங்கத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய இயக்குநர் சங்க உறுப்பினர்கள், தமிழ் உணர்வு எங்களுக்கும் இருக்கிறது, தமிழ்ர்களுக்கு எங்கெல்லாம் பிரச்னை இருக்கிறதோ, அங்கெல்லாம் முதலில் குரல் கொடுப்பது இயக்குநர் சங்கம் தான். கர்நாடக தண்ணீர் பிரச்னை தொடர்பாக நெய்வேலி வரை போராட்டம் செய்தோம்.
இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக ராமேஸ்வரம் சென்று போராட்டாம் செய்தோம். இந்தப்படத்தில் இலங்கை தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் எதுவும் கிடையாது. தமிழ் இனத்திற்கான படம் தான் இனம். சென்சார் போர்டு வரிவிலக்கு செய்தபோதும் ஒருபடத்தை தடை செய்கிறார்கள் என்றால் அவர்கள் படத்தை பார்க்க வாய்ப்பில்லை.
இந்தப்படத்தை எடுத்தது, தயாரித்தது சங்க உறுப்பினர்கள், இவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை. இதுமாதிரி தடை கொடுத்தார்கள் என்றால் படைப்பாளியின் சுதந்திரம் பறிக்கப்படும். படங்களுக்கு தடை விதிப்பது விஸ்வரூபம் மாதிரி தொடர் கதையாகிவிடக்கூடாது.
இந்தப்படம் உலகம் முழுவதும் போய் சேருகின்ற படம். அதனால் இப்படத்தை தடை செய்யாமல், படத்தை ரிலீஸ் செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர்கள் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் இன உணர்வாளர்களின் எதிர்ப்பு, கொளத்தூர் மணியின் போலீஸ் புகார் போன்ற காரணங்களால் இனம் படம் நாளை வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
No comments:
Post a Comment