குக்கூ. திரைவிமர்சனம்
பார்வையற்ற இரு உள்ளங்களின் புனிதமான காதலை இதைவிட அழகாம வேறு யாராலும் திரைப்படம் எடுக்க முடியுமா? என்பது சந்தேகம்தான். 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ போல தமிழ்த்திரையில் எப்பொழுதாவது வரும் அபூர்வ படங்களில் ஒன்றுதான் குக்கூ…
எழுத்தாளர் ராஜு முருகனை தெரியாதவர்கள் தமிழகத்தில் மிகவும் குறைவு. விகடனில் அவர் எழுதிய வட்டியும் முதலும் தொடருக்கு ஏற்பட்ட பெரும் வரவேற்பு காரணமாக புகழின் உச்சத்திற்கு சென்றவர்.
சிறுசிறு மோதலில் ஆரம்பிக்கும் தினேஷ் மற்றும் மாளவிகாவின் அழகான காதலை சின்ன சின்ன காட்சியமைப்பில் மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.
பார்வையற்றவர்களாக வரும் தினேஷும் மாளவிகாவும் சின்னச்சின்ன சண்டை போட்டு பின்னர் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள நினைக்கும் வேளையில் மாளவிகாவின் அண்ணன் தான் பட்ட கடனுக்காக வில்லனுக்கு தங்கையை திருமணம் செய்து வைக்க சதி செய்கிறான். பணத்திற்காக இருவரின் காதலை பிரித்து, தங்கையை வில்லனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கும் வேளையில் அண்ணனிடம் இருந்து தப்பித்து தினேஷிடம் ஓட நினைக்கும் மாளவிகா ஒரு விபத்தில் சிக்குகிறார்.
அதன்பின்னர் தினேஷ்- மாளவிகா இணைந்தார்களா? என்பதை விறுவிறுப்புடனும், மிக நேர்த்தியான திரைக்கதையாலும் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர்.
அட்டக்கத்தி தினேஷ் பல படங்கள் நடித்து அனுபவம் பெற்ற ஹீரோவைப்போல மின்னுகிறார். இவர் இந்த கேரக்டருக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதை திரையில் பார்க்கும்போதே தெரிகிறது. மாளவிகாவின் நடிப்பு தினேஷுக்கு ஈடுகொடுப்பதாக உள்ளது.
பாடல், பின்னணி இசை இரண்டுமே அருமை. படத்தின் க்ளைமாக்ஸ் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். இடைவேளைக்கு பின்னர் படம் கொஞ்சம் மெதுவாக நகர்வதை தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில் குக்கூ ஒரு காவியம்.
No comments:
Post a Comment